அம்மா
எனும் தெய்வம்
ஆயுள் முழுதும்
வரவியலாது என்பதால்
வரமாய் வந்தவள்...
பிறப்பு ஈந்த அன்னை
பின்னே வந்த தங்கை
கதைகள் சொன்ன பாட்டி
காதல் தந்த மனைவி
கவிதையாகும் மகள்
காலம் தந்த பேத்தி...
எல்லா நிலையிலும்
பெண்மை வெல்லும்...
விழியில் விழுந்து
இதயம் நுழைந்த
காதல் சொன்ன போழ்து
கண்கள் மிரள நின்றவள்
மனைவியான மறுநாள்
மாற்றத்தின் உச்சம் ...
நல்லது எல்லாம்
நமக்கு என்பாள்
துன்பம் வந்தால்
தன்னுள் வைப்பாள்...
விழியின் அசைவில்
விசயம் சொல்வாள்
வியந்து விளித்தால்
அணைத்துக் கொள்வாள்...
சின்ன மறதிக்கும்
சிணுங்கி நிற்பாள்
மிரண்டு நின்றால்
முரண்டு பிடிப்பாள்...
மகளாய்
மனைவியாய்
அன்னையாய்
அத்தையாய்
எல்லாவற்றையும்
எளிதாய் கடப்பாள்...
இருந்தும் நாம்
வியப்பின் விளிம்பில்
நின்ற போழ்தும்
என்னவர் இன்னும்
குழந்தை போல்தான்
விட்டுக் கொடுக்கா
விந்தை செய்வாள்...
நம்பியார் கூட
நல்லவர் ஆவார்
மனைவி என்னும்
மந்திரம் முன்தான்...
ஆண்களுக்கு
இருபத்து ஐந்து வருடம்
எல்லாமே அம்மா - பின்
ஐம்பது வருடம்
மனைவிதான் எல்லாம்...