அது ஒரு கிராமம்
நூறு வீடுகள் இருக்கும்.
ஒரு பள்ளி
இரு ஆசிரியர்கள்
வகுப்புக்கு
நாலைந்து வீதம்
இருபது மாணவர்கள்.
மக்கள் எல்லாம்
சொந்தம்
ஆசிரியர்கள் தாம்
ஆலோசகர்கள்.
மே முடிந்து
ஜூன் தொடக்கம்
ஒரு ஆசிரியர்
மாறுதலில் போக
புது ஆசிரியை வரவு.
வயது
இருபது பக்கம்
இளமை அழகு
எல்லாம் உச்சம்.
வகுப்பில் நால்வர்
ராம மூர்த்தி
மாரிமுத்து
ஜெய மோகன்
மற்றும் நான்
நால்வரில் சின்னவன்.
எப்போதும் போல்
புது ஆசிரியர்கள்
வரும்போதெல்லாம்
கேட்கப்படும்
பொதுவான கேள்வி
படித்து முடித்து
என்ன வாகப் போகிறாய்.
ராமமூர்த்தி சொன்னான்
போலீஸ் என்று
மாரிமுத்து சொன்னான்
டூரிங் சினிமா ஆபரேட்டர் என்று
ஜெயமோகன் சொன்னான்
பெரியவன் ஆனபின்
ஆசிரியர் போன்று
அழகான பெண்ணை
திருமணம் செய்வேன் என்று.
அடுத்து நம் முறை
மனதுள் ஒருகேள்வி
எதற்கு பெரியவனாகும்வரை.
என்ன சொல்லியிருப்பேன்
என்பதை சொல்லக் கூடாது
ஏனென்றால் வயசு ஏழு
படித்தது இரண்டாம் வகுப்பு.
No comments:
Post a Comment