Wednesday, February 9, 2011

பட்டாளத்து மாமா

பட்டாளத்து மாமா
-----------------------------

கரியநெடு உருவம்
கம்பீர நடை
அருவா மீசை
அலைபாயும் விழிகள்
வெள்ளை வேட்டி
வீரம் சொல்லும் தலைப்பாகை
பெயர் காரணத்துக்கு
ஒரு கதை உண்டு.........

நாப்பதுகளில்
இரண்டாம் உலகப் போருக்கு
ஆள்பிடித்த நேரம்
கிராமத்து இளைஞர்கள்
ஓடி ஒளிந்த போது
மாமா மட்டும் தைரியமாய்
வெள்ளைத் துரையின்
பின்னே போனாராம்
அதனால் வந்த
பட்டம் பட்டாளம்............

இரண்டு ஆண்டுகள்
பர்மா எல்லையில்
பதுங்கி இருந்ததை
மாமா சொல்லும் தோரணையில்
ஊரே மெய்மறந்து கேக்கும்..........

எங்கள் ஊரில்
நேதாஜியை
நேரில் பார்த்த ஒரே மனிதர்.........

பர்மா விலிருந்து
பெர்லின் போகச்
சொன்ன போது
தப்பி ஓடி
தாய்லாந்து போனது
ஒரு கதை.........

அங்கிருந்து
சிங்கப்பூர் சென்று
சீனாக் காரியை மணந்து
சின்னராசுக்கு அப்பா ஆனது
இன்னொரு கதை......

ஜப்பான் காரன்
சிங்கப்பூரை தாக்கியபோது
தப்பிப் பிழைத்து
தமிழகம் வந்தது
மற்றொரு கதை...........

போருக்குப் பின்
சிங்கப்பூர் போனவருக்கு
பெரும் அதிர்ச்சி
சீனாக் காரி
மூனாவது கணவனின்
நாலாவது குழந்தையுடன்
நான் அவளில்லை என்றாள்..........

மகனைத் தேடி
மலேசியாவில் அலைந்த போது
ராமசாமி ரஹ்மான் ஆகி
ரப்பர் தோட்டத்து
ரஷிதாவுடன் மறுமணம்
துரதிர்ஸ்டம்
காச நோயிக்கி
ரஷிதா பலி...........

சிங்கம் போல் இருந்தவர்
சிதைந்து போனார்
தேகம் மெலிந்து
பார்வை மங்கி
பகட்டுக் குறைந்து
ஊர் திரும்பிய மாமாவுக்கு
பேர் சொல்ல
யாரும் இல்லை...........

பட்டாளத்தை விட்டு
பாதியிலே வந்ததனால்
ஓய் ஊதியம் கிட்டவில்லை
ஊரும் மதிக்க வில்லை
இன்னொரு குடும்பம்
ஏற்படுத்த தெம்பில்லை..........

இருக்க இடமின்றி
பிழைக்க வழிதேடி
ஊர்க்காவல் வேலை
மாதக் கூலி
ஏக்கருக்கு ரெண்டு ரூபாய்
காலைமுதல் மாலைவரை
காடெல்லாம் அலைவதும்
ஆடு மாடு மேய்ப்பவரை
அதட்டி விரட்டுவதும் வேலை............

பக்கத்து ஊர்
சின்னவாடியில்
முத்தழகு என்றொரு
முதிர் அழகு
முன்னும் பின்னும் சதிரழகு
முதுமையும் விளிக்கும்
மோகத்தை நினைக்கும்
மொத்தத்தில்
ஐம்பது வயது
ஐஸ்வர்யா............

ஐம்பதும் அறுபதும் பார்த்தது
அருகில் அருகில் ஈர்த்தது
பருவம் மறந்து வேர்த்தது
பரவசம் ஆகி தோற்றது
கம்மாக் கரையிலும்
கருவேலை புதரிலும்
முத்தழகுடன்
மூன்றாவது யாகம்............

முப்பது வயதில்
விதவை யான
முத்தழகுக்கு
மூன்று மகன்கள்
வளர்ந்து நிமிர்ந்த
வாலிபப் பையன்கள்
முதுமைக் காதல்
அசிங்கம் என்றனர்
மோகம் என்பது
பாவம் என்றனர்
சாதியும் நடுவில்
சங்கடம் தந்தது
சாவே அதற்கு
சாபம் என்றது...............

அண்ணன் தம்பிகள்
அமர்ந்து பேசினர்
முடிவே முடிவென்று
முடித்து விட்டனர்
காவல் வந்தது
உடலை அறுத்ததில்
உணவில் விசம்
ஊர்கூடி அழுதது
ஒருவாழ்வும் முடிந்தது.........

மறுநாள்
மலேசியாவி லிருந்து
மாமாவுக்கு ஒரு கடிதம்
அனுப்புனர் சின்னராசு.........

No comments: