Wednesday, February 9, 2011

வேண்டுதல்

கு. முனியசாமி


மான்போல் துள்ளும்

இளமை வேண்டும்

மயில்போல் ஆடும்

திறமை வேண்டும்

வான்போல் பரந்த

மனம் வேண்டும் - நாடு

வறுமையை வென்ற

நிலை வேண்டும்...

ஆனென்ற அகந்தை

அகன்றிட வேண்டும்

அறியாமை இருள்நம்மை

விலகிட வேண்டும்

ஏனென்ற கேள்வி

எழுந்திட வேண்டும் - எங்கும்

இல்லாமை இல்லை

என்பது வேண்டும்...

காதலைப் போற்றும்

பெற்றவர் வேண்டும்

கவிதையை ரசிக்கும்

நண்பர்கள் வேண்டும்

இசையை ரசிக்க

தெரிந்திட வேண்டும் - ஈதல்

இலையெனி லன்றே

சாதல் வேண்டும்...

ஊருக்கு உழைக்கின்ற

உள்ளங்கள் வேண்டும்

ஒற்றுமைதான் உயர்வு

உணர்ந்திட வேண்டும்

வைகையில் கங்கை

கலந்திட வேண்டும் - நம்முள்

வங்கமும் சிந்துவும்

இணைந்திட வேண்டும்...

இலங்கையில் அமைதி

திரும்பிட வேண்டும்

ஈழம் உதிக்க

உதவிட வேண்டும்

புஸ்ஸும் சதாமும்

கைகொள வேண்டும் - என்றும்

புவியில் அமைதி,

ஒற்றுமை வேண்டும்...

No comments: