கு முனியசாமி
மண் சுவர்
அகத்தி மரவிட்டம்
கொல்லம் ஓட்டுக் கூறை
கிழக்கு பார்த்த வாசல்
இடப்பக்கத் திண்ணையில்
அப்பாவின் அப்பா
கீழே கோழிக் கூண்டு
வலப்பக்கம் அடுப்பங்கரை
அண்டா குண்டா
பாணை பண்டம்
அம்மிக்கல்
வெண்ணை உறி
விறகு அடுப்பு
மேலே புகை போக்கி
முன்அறை நிலையின் மேல்
முருகன் கோவனத்தில்
இடப்பக்கம் அண்ணன்
வலப்பக்கம் நினைவில்லை
அடுத்த அறை மச்சு வீடு
ஒருபக்கம் சாக்கு மூட்டைகள்
மறுமக்கம் பருத்தி குவியல்
மூலையில் இரும்புப் பெட்டி
பின்புறம் மாட்டுத் தொழுவம்
இரண்டு காளைகள்
பத்து ஆடுகள்
ஒரு ஆட்டுக்கல்
இரு குழுதாடி
புண்ணாக்கு தண்ணி
இன்னும் பின்னே
ஒரு வேப் பமரம்
ஒரு புளிய மரம்
ஒரு மாட்டு வண்டி
கயிற்றுக் கட்டில்
வைக்கோல் படப்பு
சாணக் குவியல்
சுற்றி முள்வேலி
வடக்கு பார்த்து
அத்தை வீடு
அண்ண னுக்காக
வளர்ந்து வரும்
அழகு மயில் கோமதி
அருகில் ஒரு புறாக் கூண்டு
அதையும் தாண்டி
ஒரு சிறு கிடங்கு
மழைக் காலத்தில்
தவளை கத்தும்
இன்னும் போனால் ஓடை
இருகரையும் கருவேலி
திறந்தவெளிக் கழிப்பிடம்
மகளிர்க்கு மட்டும்
சொல்லாத நியதி
ஐப்பசி வந்தால்
தண்ணீர் போகும்
அழுக்குகளும் சேர்ந்து போகும்
வடக்கு எல்லையில்
கிழக்கு நோக்கி பிள்ளையார்
வலப்பக்கம் தம்பி முருகன்
அதர்க்கடுத்து முத்து மாரி
வடக்கு பார்த்து காளி
அதர்க்கும் வடக்கே ஊரணி
கிழக்கே ஆரம்பப் பள்ளி
ஒரே டீச்சர்
பெயர் உண்டு வளர்ந்தாள்
உண்மைப் பெயர் தெரியவில்லை
முன்னால் கொடிக்கம்பம்
பின்னால் சிறு தோட்டம்
ஒரு முருங்கை மரம்
ஒரு வாகை மரம்
தெற்கு எல்லையில்
சோளக் காடு
இன்னும் போனால்
மிளகாய் தோட்டம்
நடுவில் கிணறு
வற்றாத ஊற்று
கரிசல் காட்டில்
கம்புப் பயிர்
காதலர் ஒதுங்க
மஞ்சள் அத்தி புதர்
கன்னிமார் கோயில்
கருப்பன் என்கிற
காவல் தெய்வம்
குதிரை மேலே
அதிரும் தோற்றம்
குலையும் நடுங்கும்
கோபப் பார்வை
ஊரின் நடுவில் சாவடி
ஒருபக்கம்
சிறுசுகளின் குதுகூலம்
மறுபக்கம்
பெறுசுகளுக்கு தாயக் கட்டம்
மாலை நேரத்தில்
ஊர் பஞ்சாயத்து
பெண்கள்
பிரம்மன் வியக்கும்
பெருமை சேர்க்கும்
மறைத்தும் மறையா
மன்மத ஓவியம்
காமம் தூண்டா
கவிதை உணர்வு
பாட்டிகள்
வளர்ந்த காதுகள்
அசைந்து ஆடும் பாம்படங்கள்
ஆண்கள்
இடையில் கோவணம்
தலைப்பா கையுடன்
காந்தியின் வாரிசுகள்..
நாராயணசாமி நாயிடு
மாமா முறை
நகை ஆசாரி
சித்தப்பா முறை
கோயில் பூசாரி
அண்ணன் முறை
சித்ரவேல் பண்டாரம்
இன்னொரு மாமா
நாராயண சாமி மகள்
பத்மா மீது
நமக்கு ஒரு ஜில்லு
சித்ரவேல் தங்கை
சுலோச்சனா மீது
அண்ணனுக்கு ஒரு இது
சாவு என்றால்
ஊர்கூடி அழும்
சடங்கு என்றால்
ஊரெல்லாம் பாடும்
கல்யாணம் என்றால்
ஊரெல்லாம் தில்லானா
சாதி கடந்த
வெள்ளந்தி மனிதர்கள்
இன்று
ஒருபக்கம் தீப்பெட்டி
மறுபக்கம் பட்டாசு
மழை என்பது
மறந்து போச்சு
கிணரெல்லாம்
வத்தி போச்சு
விவசாயம்
செத்து போச்சு
பள்ளிக் கூடம்
இடிஞ்சு போச்சு
பட்டாசு வேலை
கெடச்சு போச்சு
கள்ளச் சாராயம்
மலிஞ்சு போச்சு
பழையது எதுவும்
இன்று இல்லை
பாதி மனிதர்கள் பரலோகத்தில்
மீதி இங்கும் அங்கும் எங்கும்
போன இடம் தெரியவில்லை
கருப்பு வெள்ளை படமாய்
எனது கிராமம்
தொலைந்து போச்சு.
No comments:
Post a Comment