Saturday, December 12, 2020

 கடலுக்கு மண நாள்

கல்யாண நாள் இன்று
கடல் லதா தம்பதிக்கு...
பல்லோரும் வாழ்த்தி விட்டார் 
பகல் உதயம் ஆனமுதல்...

எல்லோரும் வியக்கும்
நல்லோனை வாழ்த்துதற்கு...
நமக்கும் ஒரு ஆசை...
நல்ல தமிழ் சொல்லெடுத்து...

எல்லோரும் உனை அறிவார்
எழுபத்து ஏழு முதல்...
என்போன்ற சிலருக்கு
இன்னும் ஒரு நாலாண்டு...

எழுபத்து மூனு 
         ஜூலை பதிமூனு ...
உன்னை நான்கண்ட 
         உன்னதநாள் அன்று...

பால்கோவா நகரத்து
பள்ளி ஒன்றில் சேர்ந்த  நாள்...
ஒன்பது படிப்பதற்கு
உயர்பள்ளி சென்ற நாள்...

வீட்டைப் பிரிந்து 
வெளியில் வந்த முதல்நாள்...
விண்ணும் மண்ணும்
விம்மி விம்மி நின்ற நாள்...

விடுதியில் சேர்த்து விட்டு - தந்தை
விடைபெற்று போன பின்பு...
கூண்டில் அடைபட்ட
கோழியாய் நின்ற போழ்து...

நானும் புதுசென்று
நட்புக்கரம் தந்தவன் நீ...
அன்றுமுதல் இன்றுவரை
அன்பனாய் நண்பனாய்...

பூப்பந்து விளையாட்டில்
புகழ்ச்சிகரம் தொட்டவன்...
பொல்லாங்கு இல்லாது
எல்லோர்க்கும் நல்லவன்...

பார்த்தவுடன் பிடித்துவிடும்
பண்புள்ளம் கொண்டவன்...
பலர்கூட இருந்தாலும்
பாசத்தில் வென்றவன்...

எல்லா நிலையிலும்
எம்மோடு இருப்பவன்...
எங்கே இருந்தாலும்
எம்நினைவில் நிற்பவன்...

நாப்பத்தி ஏழுஆண்டு
நட்பின் வயசாகும்...
இருந்தும் நினைவுகள்
எதுவும் குறையவில்லை...

உன்னை வாழ்த்த 
ஒரு பாட்டு போதாது - இருந்தும்
நீளம் கருதி நீட்டாமல் இன்று
பாட்டை சுருக்கி பாசம் பெருக்கி...

கன்னலும் தேனும்
கலந்த அன்பாகி...
உள்ளம் இணைந்த 
உன்னத வாழ்வை...

இன்றுபோல் என்றும்  
எல்லாமும் பெற்று...
பல்லாண்டு வாழ்க 
எல்லோரும் போற்ற...

No comments: